மனித உரிமை

    



      'மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை'.  "மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ , அதே மதிப்பை நீயும் அவர்களுக்கு வழங்கு" என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தத்துவமாகும்.


உரிமை 

1. 'உரிமை என்பது ஒரு நலனை அடைவதற்காக சட்டப்  பூர்வமாக உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரம்'  - ஆலன் (Allen)

2. 'அரசாங்கத்தின் சம்மதம் மற்றும் உதவியுடன் பிறருடைய செயலைக் கட்டுப்படுத்துவதற்காக  ஒரு மனிதனிடத்தில் குடிகொண்டுள்ள திறமையே உரிமையாகும்'  - ஹாலண்ட் (Holland)


3. "சில இயற்கையான அதிகாரங்களைப்  பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி, சில நிலைமைகளில் மக்களின் நிர்பந்தத்தின் உதவியால் பாதுகாப்பு, இழைக்கப்பட்ட உரிமைகளை அடைதல்  - நிவாரணம் பெறுதல் என்பதற்கான அனுமதியே உரிமையாகும் '  - ஹோல்ம்ஸ் (Holms)


4. 'சட்டம் அங்கீகரித்து பாதுகாக்க வேண்டிய நலனாகும். அதற்கு மதிப்பளித்து பாதுகாக்க வேண்டியது சட்டப்  பூர்வமான கடமையே உரிமையாகும்'. - சால்மண்ட் (Salmont)


மனித உரிமை 


     மனித உரிமை என்பது காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் , சமுதாயத்திற்கு சமுதாயம்  வேறுபடுகிறது.  மாறிவரும் காலம் / சமூகம் / பொருளாதார சூழ்நிலைக்கேற்ப பொருள் மாறிக்கொண்டே வருகிறது.


1. 'ஒருவன் மனிதனாக இருப்பதனாலேயே அவனுக்குள்ளே இயற்கையாகவே உள்ள உரிமைகள் காணப்படுகிறது.  அதுவே மனித உரிமைகளாகும்.  இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை'  - ஜேக்டோனல்லி (Jack Donnely)


2. 'அச்சத்திலிருந்து விடுபடுவதே மனித உரிமைத் தத்துவத்தின் சாராம்சம்'. - டேக்  ஹம்மர்க் ஜோல்ட் 


3. 'மனித உரிமைகள் என்றால் சுதந்திரம்' - N.A. பல்கிவாலா 


4. 'எவ்வித பயமும் இன்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்'.  - டி.டி. பாசு.


5. 'மனிதனின் மதிப்பிலிருந்தும் கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" - 1933 வீயன்னா மனித உரிமைகள் மாநாட்டு பிரகடனம். 


மனித உரிமைகளின் வகைகள்:

(Classification of Rights)

     மனித உரிமைகள் என்பது மனிதர்களுக்கே உரித்தான மனிதர்கள் அனுபவிக்கக் கூடிய நியாயமான சலுகைகள் ஆகும்.  மனித உரிமைகள் இன்றி மனிதர்கள் மனிதர்களாக வாழ முடியாது.  மேலும் இந்த உரிமைகளை மனிதர்களிடமிருந்து பிரிக்கவும் இயலாது.  உரிமைகளும், சுதந்திரமுமே  மனிதர்களின் குணங்களையும், அறிவுக்  கூர்மையையும் மற்றும் திறமைகளையும் நிர்ணயிக்கின்றது.


     மனித உரிமைகளை அரசியல் அறிஞர்கள் இரண்டாகப்  பிரித்தனர்.

1. அறநெறி உரிமைகள் 
2.சட்ட உரிமைகள் 

1. அறநெறி உரிமைகள் 

(Moral Rights)
     சமுதாயத்தாலும் சமயங்களாலும் எடுத்துச் சுட்டிக்  காட்டப்பட்ட அறநெறிகள் அடிப்படையில்  பின்பற்றப்படும் உரிமைகள் அறநெறி உரிமைகள் எனப்படுகிறது.  இவை சமுதாயத்தால்  அங்கீகரிக்கப் பட்டவையாகும்.  இந்த உரிமைகளுக்குச் சட்டப்  பின்னணி கிடையாது.  சட்டத்தால் காக்கப் படுபவையும் அல்ல.  எந்த நீதி மன்றத்தாலும் இவ்வுரிமைகளைக்  கட்டுப்படுத்தவும் இயலாது.

2. சட்ட உரிமைகள் 

(Legal Rights)
     சட்ட உரிமைகள் சட்டங்களின் வாயிலாக உறுதி செய்யப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் காக்கப் படுகின்றன . சட்ட உரிமைகள் பாரபட்சமில்லாமல் சாதி, மத, இன, நிற வேறுபாடில்லாமல்  எல்லோருக்கும் பொருந்தும் வகையில் செயல்படுத்தப் படுகிறது.  அதே நேரம் இந்த உரிமைகளை இறுக்கிப் பிடிக்கவும், தளர்த்திக் கொள்ளவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.  சட்ட உரிமைகளை மீறியவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள்.

சட்ட உரிமைகளின் வகைகள் 

1. வாழ்வியல் உரிமைகள் 
2. அரசியல் உரிமைகள் 
3. பொருளாதார உரிமைகள் 

1. வாழ்வியல் உரிமைகள் :


       ஒரு மனிதன் நாகரிகமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் அவனுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது பாதுகாப்புடன் வாழ்க்கையை அனுபவித்தல் மற்றும் சொத்துரிமை.
     ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.
      அப்படி தலையிடுவதைத் தடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கு உண்டு.
     பாதுகாப்புடன் உரிமைகளை அனுபவிக்கும் அடிப்படையில் தான் மக்களின் தரமும், அரசாங்கத்தின் தரமும் மதிப்பிடப்படுகிறது.
     வாழ்வியல் உரிமைகளில் 11 உரிமைகள் உள்ளடங்கியுள்ளன.

 1 . வாழ்வதற்கான உரிமை  (Right to  Live)
 2 . சுதந்திரமாக வாழும் உரிமை (Right to  Liberty)
 3 . வேலை செய்யும் உரிமை (Right to Work)
 4 . கல்வி உரிமை (Right to Education)
 5 . சொத்துரிமை (Right to Property)
 6 . ஒப்பந்த உரிமை (Right to Contract)
 7 . பேச்சுரிமையும் ,  எழுத்துரிமையும்                           (Right to Speech and Press)
 8 . சங்கம் அமைக்க உரிமை 
       (Right to Assembly and Association)
 9 . சமய உரிமை (Right to Religion)
 10 . இல்லற வாழ்வு உரிமை
       (Right to family)
 11 . சமத்துவ உரிமை (Right to Equality)

2. அரசியல் உரிமைகள்
    (Political Rights)
     ஒவ்வொருவரும் நேர்முகமாகவோ/மறைமுகமாகவோ தனது நாட்டின் அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறான்.  அரசியல் உரிமைகள் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன.  வெளிநாட்டினருக்கு அளிக்கப் படுவதில்லை.  ஆட்சியில் உரிமைகள் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. வெளிநாட்டினருக்கு அளிக்கப்படுவதில்லை.  ஆடசியில் பங்குக் கொள்ளும் உரிமையும் அரசியல் உரிமையாகும்.

அரசியல் உரிமைகளின் வகைகள்:

1. வாக்களிக்கும் உரிமை (Right to Vote)
2. தேர்தலில் போட்டியிடும் உரிமை
    (Right to be elected)
3. அரசு பணி வகிக்கும் உரிமை
    (Right to public office)
4. முறையீடு செய்யும் உரிமை(Right to petition)
5. அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை 
     (Right to criticise the government)

3.பொருளாதார உரிமைகள் (Economic Rights)
     மனிதனின் சராசரி வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றைப் பெறும்  அளவுக்கு; உற்பத்தித் திறம் கொண்டவர்களாக மனிதர்களை உயர்த்துவதே பொருளாதார உரிமைகளின் அடிப்படைக்  கூறுகளாகும்.

1. வேலை செய்யும் உரிமை (Right  to work)
2. வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை 
     (Right to adequate wages)
3. நியாயமான வேலை நேரத்தைக் கோரும்            உரிமை (Right to fair working hours)
4. தொழிற்சாலைகளில் தன்னாட்சி உரிமை 
5. மனித உரிமைகளின் வளர்ச்சி
    (Development of human rights)

மனித உரிமை தோன்றிய வரலாறு 

கி.மு.

     கி.மு. 3260ல் லகாய் நாட்டில் ஆட்சி செய்து வந்த உருக்கினா என்ற அரசரின் காலத்திலும், கி.மு. 2300ல் ஆட்சி செய்த அக்காட் நாட்டு மன்னர் சர்கான் ஆட்சியின் போதும் மனித உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டங்கள் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

     கி.மு. 2123 முதல் 2081 வரை ஹமுராபி பாபிலோனை ஆட்சி புரிந்தார். அவர் சிறந்த சட்ட நிபுணர் ஆவார்.  அவர் சட்டங்களை தொகுத்து மக்களுக்கு அளித்தார். அதில் மனித உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டங்கள் காணப்பட்டன.  அதில் முக்கியமானது தகப்பன் சொத்தில் எல்லாப் பிள்ளைகளுக்கும் உரிமை உண்டு என்பது.

     கிரேக்க நாட்டிலும் இயற்கை உரிமை அடிப்படையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் தொடர்பான வலுவான சட்டங்கள் செயல்படுகின்றன.

     கி.மு. 450ல் ரோமானியச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன. அவை உலகிற்கு அளித்த கொடை என்று சொல்வர்.  அதில் ரோமானிய குடிமக்களுக்கு மட்டுமே உரித்தான ஜஸ்சிவிலிஸ், அடிப்படை உரிமைகளைக் காக்கும் ஜஸ்நேச்சுரல் ஆகிய சட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கி.பி.

1. மகாசாசனம் (Magna Carta 12156)
     இங்கிலாந்தை கி.பி. 1199-1216 வரை ஜான் மன்னர் ஆட்சி செய்தார்.  அவர் நாட்டு மக்களின் பல்வேறு தரப்பினரின் வெறுப்புக்கு ஆளாகி இருந்தார். அரசு எதிர்ப்பு சக்திகளின் தலைமை குழுவான ஸ்டீபன் லாங்டனின் தலைமையில், ஆங்கிலப் பிரபுக்கள் மனித உரிமைகள் அடங்கிய சாசனத்தை  1215ல் தயாரித்தனர். அதில் ஜூன் 15-ம் தேதி 1215ல் மன்னர் ஜான் அரசு முத்திரையிட்டு மக்களுக்கு வழங்கினார்.

மகாசாசனத்தின் உட்கூறுகள் 
     மகாசாசனம் மூன்று பகுதிகளையும், 63 உட்பிரிவுகளையும்  கொண்டதாகும்.  அதில் இரண்டாவது பகுதியில் தான் மன்னர் மக்களுக்கு வழங்கிய உரிமைகள் 41 பிரிவுகளில் விளக்கப் பட்டுள்ளது.  "மகாசாசனத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளும், சலுகைகளையும் மன்னர் மீறமாட்டார். அப்படி மீறி நடந்தால் வலுக்கட்டாயமாக அந்தச் சட்டங்களை மதித்து நடக்க கட்டாயப்படுத்தப்படுவார்" என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.  அதில் 'உரிமை liberty ' என்ற சொல் அதிகளவில் பயன்படுத்தப் பட்டிருந்தது.  அதில் நாட்டின் சட்டத்தைப் பற்றியும்,நாட்டு மக்களின் உரிமைகள் பற்றியும் , நாட்டை ஆளும் மன்னர் இவ்விரண்டையும் மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறது.
     இந்த சாசனம் உலகரங்கில் சுதந்திர நாடுகள் உருவாவதற்கு உரமாகப் பயன்பட்டு உரிமைகளைக் காத்து நிற்கிறது. 13-ம் நூற்றாண்டில் மக்களின் சிந்தனையில் ஒரு சீரிய இடத்தைப் பெற்றிருந்தது.

2. உரிமைகள் விண்ணப்பம்
   (Petition of rights, 1628)
     இங்கிலாந்து அரசியலமைப்பு வரலாற்றில் உரிமைகள் விண்ணப்பம் ஒரு சிறந்த இடத்தைப் பெறுகிறது.  இந்த உரிமைகள் விண்ணப்பத்தை தயாரித்தவர்கள் எலியட்,கோக்,ஷெல்டன் போன்ற சட்ட நிபுணர்கள், மன்னர் முதலாம் சார்லஸ் காலத்தில 1628, ஜூன் 7-ம் தேதி உரிமை விண்ணப்ப மசோதா பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேறியது.

     இந்த விண்ணப்பத்தில் "உரிய காரணம் காட்டாமலும், சட்டரீதியான விசாரணை இல்லாமலும் எவரையும் மன்னர் சிறையில் அடைக்க முடியாது.  போர் வீரர்களை தங்கள் வீடுகளில் வைத்து பராமரிக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது" போன்றன வலியுறுத்தப்பட்டன.  இந்த விண்ணப்பம் மக்களுக்குத் தேவையான உரிமைகளை உடனடியாகக் கிடைக்க செய்தது. இதனைத் தொடர்ந்து;

      *1641-ல் அரசியல் துரோக மரண              
        தண்டனைச் சட்டம்,
     * 1679 - ஹேபியல் கார்பஸ் கட்டம் 
        இயற்றப்பட்டது.

3. உரிமைகள் மசோதா (Bills of Rights 1689)

     மூன்றாவது பேருரிமைப் பத்திரம் என்று புகழப்படும் உரிமைகள் மசோதா 1689 அக்டோபர் 25ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.  இது இங்கிலாந்தில் காணப்பட்ட வரம்பற்ற  முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.  இதன் மூலம் மன்னர்கள் பின்பற்றிய தெய்வீக உரிமைக்  கொள்கை ஒழிக்கப்பட்டது.  நாட்டின் அடிப்படைச் சட்டங்களுக்கு புறம்பாக நடக்க மன்னருக்கு உரிமை கிடையாது என்று வலியுறுத்தியது. மக்கள் போராடிப் பெற்ற  உரிமைகள் அனைத்தையும் இம்மசோதா மூலம் பெற்றனர்.

4. அமெரிக்க விடுதலைப் பிரகடனம் 1776

     வட அமெரிக்காவில் அமைக்கப்பட்ட 13 குடியேற்ற நாடுகள் ஒன்று சேர்ந்து தங்கள் தாய் நாடான இங்கிலாந்துக்கு எதிராக நடத்திய போரே  அமெரிக்க சுதந்திரப் போராகும்.  இந்தப் போரில் குடியேற்ற நாடுகள் வெற்றியடைந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற புதிய  சுதந்திர நாடு உருவாகியது .  மனித இனத்தின் பறிக்கப்பட்ட முடியாத அடிப்படை உரிமைகளைத் தொகுத்துக் காட்டியது.  உலகம் முழுவதும் நடைபெற்ற உரிமைப் போர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது அமெரிக்க சுதந்திர போர்.

     அமெரிக்கர்களின் இந்த உரிமைப் போராட்டத்திற்கு அடிப்படையாக  விளங்கியவர் தாமஸ் பெயின் என்பவர். 1776 ஜனவரியில் எழுதி வெளியிட்ட பொது அறிவு நூல் (Common  Sense ). அந்தக் காலத்தில் நிலவிய குழப்பங்களுக்கு சுதந்திரம் ஒன்று தான்  மருந்து என்றார்.  அதன் அடிப்படையில் 1776 மே 15-ல்  வர்ஜினியாவைச்   சேர்ந்த ரிச்சர்ட் ஹென்றி என்பவர் காங்கிரசில் அமெரிக்காவுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.  இதன் அடிப்படையில் விடுதலைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டது.

     விடுதலைப் பிரகடனத்தை வரைவதற்கு தாமஸ் ஜெபர்சன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.  சிந்த எழுத்தாளரான ஜெபர்சன் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய விடுதலை பிரகடனத்தை அழகிய ஆங்கிலத்தில் எழுதினார்.  இப்பிரகடனம் 1776, ஜுலை 4-ல் வெளியிடப்பட்டது.  இந்தப் பிரகடனம் "பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம். வேறுபாடற்றவர்கள்" என்று முழங்கியது.

  'எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.  படைத்தவனால் அவர்களுக்கு வாழ்க்கை உரிமை, சுதந்திர உரிமை,மகிழ்ச்சியை நாடும் உரிமை ஆகிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த உரிமைகள் யாராலும் பறிக்கப்பட முடியாது.  இந்த உரிமைகளைப் பெறுவதற்காகவே அரசுகள் நிறுவப்படுகின்றன.  இந்த உரிமைகளை ஒரு அரசாங்கங்கள் மீறுமானால் மக்கள் கிளர்ந்தெழுந்து புதிய அரசாங்கம் ஒன்று அமைப்பதற்கு உரிமை உண்டு" என்று பிரகடனத்தில் கூறப்பட்டது. குடியாட்சி தத்துவத்தை இரத்தின சுருக்கமாகச் சொல்கிறது.

அமுல் (Amul) உருவான வரலாறு

     Amul  என்றால் சமஸ்கிருத மொழியில் "விலை மதிப்பற்றது " என்பது பொருள்.  ஆனால் நாம் பெரும்பாலும் அறிந்த Amul  நிறுவனம் உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனமாகும்.  நாட்டின் பால் உற்பத்தியில் அமுல் நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு இந்நிறுவனத்தின் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.  நம் நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் அதிகரிக்கக் காரணமானது இந்நிறுவனம். 

     Amul (Anand  Milk  Producers  Union Limited ) என்பது இந்திய மாநிலமான குஜராத்தில் ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும்!


அமுலின்  தோற்றம் 

   முதன் முதலாக Amul  நிறுவனத்தை உருவாக்கியவர் திரிபுவந்தாஸ் கிரிஷிபாய் படேல் ஆவார்.  அவர் இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.  1940 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலுடன் கெடா மாவட்டத்தில் விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதற்கென யூனியன் அமைத்து வெர்கீஸ் குரியன் (Verghese Kurien ) என்பவரை மேலாளராக 1950 ஆம் ஆண்டு பணியமர்த்தினார்.





     வெர்கீஸ் குரியன் பின் வரும் நாட்களில் அமுலுடன் ஒன்றிவிட்டார். திரிபுவந் தாஸ் , தான் நிறுவிய அறக்கட்டளையின் பொறுப்பைக் கவனித் தொடங்கினார்.  எனவே அமுல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வெர்கீஸ் குரியனுக்கு  கிடைத்தது.  1946, டிசம்பர் 14 -இல் அமுல் கூட்டுறவு நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.  1970 ஆம்  ஆண்டு இந்தியாவின் வெண்மைப்  புரட்சிக்கு இந்நிறுவனம் தலைமைத் தாங்கியது .

இந்தியாவின் பால்காரர் 

     வெர்கீஸ்  குரியன் , இந்திய வெண்மைப்  புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.  இந்தியாவின் பால்காரர் என்றும் சிலர் கூறுவதுண்டு.  கோழிக்கோட்டில் பிறந்த இவர் சென்னை லயோலாக்  கல்லூரியில் 1940 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்களைப் பட்டம் பெற்றவர்.  சென்னைப் பல்கலையில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார்.

     1946 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில் நுட்ப நிலையத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.  பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்தில் படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்பு நிலையில் பெற்றார்.


     இந்தியா வந்தபிறகு, மே 1949 ஆம்  ஆண்டு ஆனந்த் அரசு பால்பண்ணையில் பொறியாளராகச் சேர்ந்தார்.  அதே நேரம் திரிபுவந் தாஸ்  துவங்கிய கூட்டுறவு பால்பண்ணை (கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்) தனியாரிடம் இருந்த பொல்சன்  பண்ணையுடன் போட்டியிட்டு தோற்றுக்  கொண்டிருந்தது.





      அரசுப் பணியில் சவால்கள் இல்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.  கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவந் தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட  உதவுவதாகக் கூறினார் குரியன்.  இதுவே Amul (அமுல்) பிறக்க வழி வகுத்தது.  மேலும் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் குஜராத்தில் உதயமானது.


     பால் பண்ணை மேம்பாட்டிற்காக குரியனுக்கு  இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


1. 1963 இல்  சமூக தலைமைக்காக ரமன் மக்சேசே விருது .

2. 1965 இல் பத்மஸ்ரீ  விருது 
3. 1966 இல் பத்ம பூஷன் விருது 
4. 1986 இல் இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து கிருஷி இரத்னா விருது 
5. 1986 இல் கார்னெகி நிறுவனத்திடமிருந்து வாடேலர் அமைதிப்  பரிசு 
6. 1989 இல் உலக உணவுப் பரிசு 
7. 1993 இல் பன்னாட்டு மனிதர் - உலக பால்பண்ணை கண்காட்சி , மாடிசன், ஐக்கிய அமெரிக்கா .
8. 1999 இல் பத்ம விபூஷண் விருது 
9. 2007 இல் கரம்வீர் புரஸ்கார்.


Dr. Verghese kurien's quotes:


    " The backward sections of society in India have been exploited and ill-treated for many years.  Therefore, there is a need to make up for it (the ill-treatment)"


     "Indian needs to show an honest face, a kind face, a human face - and not an arrogant face as the powerful nations of today."


 His philosophy in life is


     "To do as much good as I can to those who are less fortunate, but I would like to live my life as a common man".


     "Life is a privilege and to waste it would be wrong. In living this privileged "Life", you must accept responsibility for yourself, always use your talents to the est of your ability and contribute somehow to the common good".


    "We must build on the resources represented by our young professionals and by our nation's farmers.  Without their involvement, we cannot succeed. With their involvement we cannot fail."


     "India's place in the sun would come from the partnership between wisdom of its Rural people and skills of its professionals".


     "A person who does not have respect for time, and does not have a sense of timing, can achieve little".


     "Unfortunately, we forgot that the biggest asset of India is its people.  Any sensible government must learn to unleash the energy of its people and get them to perform instead of trying to get a bureaucracy to perform".


     "We Indians are an extremely intelligent people but we can progress as a nation only when we learn the secret of unleashing this positive power of the people.  Whenever this happens it disturbs a lot of people because they know that a giant is waking up".


     "For those who believe, no explanation is necessary; for those who do not, no explanation is possible. I".


Books he wrote


1. I Too Had a Dream in 2005

2. An Unfinished Dream in 1997
3. Syrian Christian Names from Kerala

தொலைபேசி (Telephone) உருவான வரலாறு

     Telephone எனும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்.  Tele என்றால் 'தூரம்'Phone என்றால் 'சப்தம்', 'குரல்' என்பது பொருள். தொலைபேசி என்பது ஒரு தொலைதொடர்பு சாதனமாகும்.

     அமெரிக்க குடியுரிமைப் பெற்ற ஸ்காட்லாந்து நாட்டின் ஒரு காது கேளாதோர் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல்.  எடின்பர்க் நகரில் மார்ச் 3, 1847 ஆம் ஆண்டு பிறந்தவர் பெல்.

     அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில் பெல் ஆவார்.  இவர் ஒரு ஒலிப்பு நிபுணர் (Phonetician).  'கோட் '  வார்த்தைகளைக் கண்டுபிடித்தவர். பெல்லின் தாய் ஒரு காது கேளாதவர்.  தாயின் காது கேளா தன்மையே பெல்லை ஒலியியல் படிக்க வழிவகுத்தது எனலாம்.

     இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார் பெல்.  பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.


     பல தந்திகளை அனுப்பும் 'ஹார்மோனிக் டெலிகிராப்' முறையில் சப்தங்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் கண்டறிந்தார்.


     பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார் பெல்.  தந்திமுறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன.  பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று 18 வயதிலேயே பெல்லிற்குத் தோன்றியது.  அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபட்டார்.




பெல்லின் கைகளால் வரைந்த வரைபடம் 
     
     அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாய் இருந்தன.  1875 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரம் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேச்சு ஒலியை அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார்.  அவ்வாறு அனுப்பிய பேச்சொலி தெளிவில்லாமல் இருந்தது.  






     1876 ஆம் ஆண்டு பெல் தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் உதவியுடன் தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.  'மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள்.  நான் உங்களைக் காண வேண்டும் (Mr. Watson, come here, I want to see you)'.  இதுதான் தொலைபேசியில் முதன் முதலாக பேசப்பட்ட வாக்கியம். 1876 ஆம் ஆண்டு பெல் தனது Telephone - னுக்கு காப்புரிமையைப் பெற்ற போது அவருக்கு வயது 29.

    இதே காலகட்டத்தில் எலிசாகிரே எனும் அமெரிக்கர் Telephone போன்றே ஒன்றைக் கண்டுபிடித்தார்.  தாமஸ் ஆல்வா எடிசன் கூட இதேபோல் ஒன்றைக் கண்டுபிடித்தார்.  ஆனால், Telephone -ஐ முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் என்று காப்புரிமை பெற்றவர் பெல்தான்.


     1877இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பெனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார்.  தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு 50,000 பிராங்க் பரிசுத் தொகையை வழங்கியது.  அந்த பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laoratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.


     தனிப்பட்ட முறையிலும் பிற அறிவியல் அறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார்.  1882 ஆம் ஆண்டு பெல் அமெரிக்கக் குடியுரிமைப் பெற்றார்.  தன் வாழ்நாளின் பிற்பகுதியை இங்குதான் கழித்தார்.  ஆகஸ்ட் 2, 1922 ஆம் ஆண்டு கேப் பிரிட்டன் தீவிலுள்ள எஸ்டேட்டில் காலமானார்.  அன்றைய தினம் அமெரிக்க அரசு, அமெரிக்கா முழுவதும் 5 நிமிடங்கள் டெலிபோன் சேவையை நிறுத்தி, பெல்லிற்கு மரியாதை செலுத்தியது.

கிரகாம் பெல்லின் கையெழுத்து 




சானடோரியம்(Sanatorium) உருவான வரலாறு

    
     Sanatorium என்ற சொல்லுக்கு பிணி நீக்குவதற்கான இல்லம் என்று அகராதி பொருள் தருகிறது. Sanatorium என்பது அரிதாக சானிட்டோரியம் என்றும் அழைக்கப்படுகிறது.  நீண்ட கால நோய்களை நீக்குவதற்கான வசதிகளைக் கொண்ட மருத்துவ இல்லம் இந்த சானடோரியம் ஆகும்.  இது பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) கண்டுபிடிப்பதற்கு முன் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்I காசநோய் (Tuber Culosis - TB) சிகிச்சையுடன் தொடர்புடைய சொல் ஆகும்.
     
     சானடோரியாவின் முதல் ஆலோசனை, 1836 ஆம்  ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சுட்டன்  கோல்ட் பீல்டில் (Sutton Cold Field) ஒரு சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.  இதை நிறுவியவர் ஜார்ஜ் போடிங்டன்  (George Bodington) ஆவார்.  இதில் நோயாளிகள் நீண்ட காலம் தங்கி சிகிச்சைப் பெற்றனர்.   1840 ஆம் ஆண்டு "நுரையீரல் நுகர்வு சிகிச்சை மற்றும் குணப்படுத்துதல்" என்ற கட்டுரையை வெளியிட்டார் .  இவருடைய அணுகுமுறை மற்றும் கருத்துகள்  விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டது.  இதனால் இவருடைய சுகாதார நிலையம் புகலிடமாக மாற்றப்பட்டது.


டாக்டர் சவ்ரிமுத்து 

     டாக்டர் டேவிட்  ஜேக்கப் ஆரோன் சவ்ரிமுத்து  (Dr. David Jacob Aaron Chowry Muthu) என்பவர் தனியார் காசநோய் நிபுணர்.  இவர் 1864ல் பிறந்தவர். இங்கிலாந்தில் எம்.டி., எம்.ஆர்.சி.எஸ் (MD and MRCS) பட்டம் பெற்றவர்.  1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷாய்ச் சேர்ந்த பெண்ணான போக்ஸ் என்பவரை மணந்தார்.




  காசநோய் உள்பட நெஞ்சக மருத்துவத்தில் கைதேர்ந்தவராக சவ்ரிமுத்து இருந்தார். சுற்றுப்புறத் தூய்மை, தூய காற்றை சுவாசித்தல் போன்ற விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சையை அளித்துவந்தார் . 1900 ஆம் ஆண்டு இங்கில்வுட் சானடோரியத்தின் (Inglewood Sanatorium at the Isle of Wight) பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.


      1910ஆம் ஆண்டு சாமர்செட் (Somerset) பகுதியில் உள்ள மெண்டிப்  மலைப்பகுதியில் (Mendip Hills) சானடோரியம் (Hill Grove Sanatorium) ஒன்றை நிறுவி காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்.  சானடோரியம் அமைத்து சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக விளங்கினார் சவ்ரிமுத்து .




     1917ஆம் ஆண்டில் விரிவடையாத அந்த சுகாதார 
நிலையத்தில் அவரது உயர் நோயாளிகளில் ஒருவராக, கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜன் இருந்தார். டாக்டர் சவ்ரி முத்துவின் மற்றுமொரு நண்பர் மகாத்மா காந்தி ஆவார்.  அவர்கள் இயற்கையாக குணப்படுத்துதல் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த செல்வாக்கின் காரணமாக சவ்ரிமுத்து இந்தியாவிற்கு வரத் தொடங்கினார். அப்பொழுது காசநோய் நோயாளிகளுக்கு ஒரு சுகாதார நிலையம் தொடங்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியது.

     அதன் விளைவாக தாம்பரத்தில் பச்சை மலை அடிவாரத்தில் 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார்.  ஏப்ரல் 9, 1928 ஆம் ஆண்டு 12 படுக்கைகளுடன் கூடிய சுகாதார நிலையத்தை அமைத்தார்.  அன்றைய சுகாதார அமைச்சர் சி.பி. இராமசாமி அய்யர் தொடங்கிவைத்தார்.  பின்னர் ஒரு நாள் சவ்ரி முத்துவின் மனைவி இங்கிலாந்தில் மரணமடையவே அவர்  மீண்டும் இங்கிலாந்து செல்ல நேர்ந்தது .  அதனால் அவர் தாம்பரம் சானடோரியத்தை 1937 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று அரசிடம் விற்றார்.  மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.






      அரசு ஏற்று நடத்தியப்  பின்னர் சானடோரியத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே வசதி, ஆய்வக வசதி, படுக்கை வசதி ஆகியவை உருவாக்கப்பட்டன.  இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் இந்த சானடோரியம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது.  நாடு விடுதலைப் பெற்ற பிறகு மத்திய அரசு தாம்பரம் சானடோரியத்தில் காசநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.  அங்கே தங்கியிருந்த நோயாளிகளுக்குத் தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு 750 படுக்கை வசதிகளுடன் சானடோரியத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தியது.

   
 1993 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் காசநோய்க்காக இங்கே தங்கி இருவர் சிகிச்சை பெற்றனர்.  அப்போதுதான் எய்ட்ஸ் நோயாளிகளுக்கெனத் தாம்பரம் சானடோரியத்தில் சிகிச்சை தொடங்கியது .  அத்துடன் அதன் கண்காணிப்பாளராக புகழ்பெற்ற மருத்துவர் செ .ந. தெய்வநாயகம் இருந்தபோது எய்ட்ஸ் நோயாகிகளுக்கு அலோபதி - சித்த கூட்டு மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.  தற்போது 'தாம்பரம் டிபி சானடோரியம்' என்று அறியப்படும் இந்த மருத்துவமனை தமிழகத்திலேயே காசநோயாளிகளுக்கென பிரத்தியேகமான மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.  இந்தியாவின் மிகப் பெரிய எய்ட்ஸ் நோய்  மையமாகவும் தாம்பரம் சானடோரியம் உள்ளது.



   பிரிட்டிஷ் இந்தியாவில் குடில்களுடன் தொடங்கிய இந்த சானடோரியம் , இன்று சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையாகவும் கிரேட்டர் சென்னையின் தனி அடையாளமாகவும் உருவெடுத்துள்ளது.